பருத்தித்துறை நகரப் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை துறைமுக கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
பருத்தித்துறை நகரப் பகுதியில் துறைமுகத்திற்கு அண்மையில் வசித்து வந்த சிவபிரகாசம்-புனிதவதி (வயது-80) என்ற மூதாட்டி அதிகாலை முதல் காணமல் போயிருந்தார்.
வீட்டில் குறித்த மூதாட்டி இல்லாத நிலையில் அயல் பகுதியெங்கும் குடும்பத்தினர் தேடிவந்த போது பருத்தித்துறை துறைமுக பகுதி கடலில் சடலமொன்று காணப்படுவமை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து பருத்தித்துறை பொலிஸாருதுக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் கடலில் காணப்பட்ட குறித்த சடலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் காணாமல் போயிருந்த மூதாட்டியுடையது என குடும்பத்தவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நடராசா-ரஜீவன் முன்னிலையில் சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம்-சிவராஜா மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
அதன் பின்னர், பதில் நீதவான் பணிப்பின் பிரகாரம் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை